Thursday, May 9, 2013

பெண் குழந்தைத் தாலாட்டு - பாரதிதாசன்

சோலை மலரே ஸ்வர்ணத்தின் வார்ப்படமே 
காலை இளம் சூரியனைக் காட்டவந்த பெண்ணழகே
வன்மை உயர்வு மனிதர் நலமெல்லாம்
பெமையினால் உண்டென்று பேச வந்த பெண்ணழகே
நாயென்று பெண்ணை நவில்வார்க்கும் இப்புவியில்
தாயென்று பெண்ணைத் தமிழர்க்குக் காட்ட வாய்த்தவளே
வெண்முத்தில் நீலம் விளையாடிக் கொண்டிருக்கும் 
கண்கள் உறங்கு கனியே உறங்கிடுவாய்
அன்னத்தின் தூவி அனிச்ச மலரெடுத்து
சின்ன உடலாகச் சித்தரித்த மெல்லியளே
மின்னல் ஒளியே விலை மதியா இரத்தினமே
கன்னல் பிழிந்து கலந்த கனிச்சாறே
வேண்டாத சாதி இருட்டு வெளுப்பதற்குத்
தூண்டா விளக்கைத் துலங்கும் பெருமாட்டி
புண்ணில் சரம் விடுக்கும் பொய் மதத்தின் கூட்டத்தை
கண்ணில் கனல் சிந்திக் கட்டழிக்க வந்தவளே
தெய்வீகத்தை நம்பும் திருந்தாத பெண்குலத்தை
உய்விக்க வந்த உவப்பே பகுத்தறிவே
எல்லாம் அவன் செயல் என்று துடை நடுங்கும்
பொல்லாங்கு தீர்த்துப் புதுமை செய்ய வந்தவளே
வாயிலிட்டுத் தொப்பை வளர்க்கும் சாதிக் கிடங்கைக்
கோயிலென்று காசு தரும் கொள்கை தவிர்ப்பவளே
சாணிக்குப் பொட்டிட்டு சாமிஎன்பார் செய்கைக்கு
நாணி உறங்கு நகைத்து நீ கண்ணுறங்கு   


No comments: